|
ம.தி.மு.க-வின்
கொள்கைப் பரப்புச் செயலாளர்’ என்ற அடையாளத்துடன் நாஞ்சில் சம்பத் கடைசியாகக்
கலந்துகொண்ட பொதுக்கூட்டம், ராமநாதபுரத்தில்தான். இப்போது கட்சிக் கரை வேட்டியை
மாற்றிக்கொண்டு கூட்டத்தில் பேசுவதற்காக, 'அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச்
செயலாளராக’ ராமநாதபுரம் வந்தவரிடம் பேசினேன்.
''ம.தி.மு.க-வை விட்டு விலக என்னதான் உண்மையான
காரணம்?''
''தி.மு.க,
அ.தி.மு.க மாதிரி, ம.தி.மு.க. பலமான கட்சிக் கிடையாது. இருந்தாலும், அதுவும் மற்றக்
கட்சிகள் போல் தொண்டர்கள் செல்வாக்கு நிறைந்தது என்று, மக்கள் மத்தியில் ஒரு இமேஜை
உருவாக்கியதே நான்தான். கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் செல்வாக்குப்
பெறக்கூடாது என நினைப்பதில், ஆயிரம் கருணாநிதிக்குச் சமம் வைகோ. அதனால்தான்
விலகினேன்.''
''தி.மு.க-வுக்கு லெப்ட் இன்டிகேட்டர், ரைட்
இன்டிகேட்டர் எல்லாம் போட்டுப்பார்த்து, பொசுக்குன்னு அ.தி.மு.க-வில்
சேர்ந்துட்டீங்களே?''
''முதல்ல அப்படி
ஒரு எண்ணமே கிடையாது. பேச்சுதான் எனக்குத் தொழில் என்பதால், 'புதிய தலைமுறை’
தொலைக்காட்சியில் டாக் ஷோ நடத்துவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில்
கையெழுத்துப் போட இருந்த நேரத்தில்தான் அ.தி.மு.க-வில் சேருவதற்கு அழைப்பு வந்தது.
முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது. எதையும் வெளிப்படையாகப் பேசிவிடும் என்னுடைய
சுபாவத்துக்கு அ.தி.மு.க-வில் காலம் தள்ள முடியுமா என்று ஓ.பி.எஸ்-ஸிடம் கேட்டேன்.
'நாங்கல்லாம் இல்லையா, அதுபோல் நீங்களும் இருங்க. பாத்துக்குறோம்’ என்றார். அவருடைய
அந்த உத்திரவாதமான வார்த்தை, எனக்கு நம்பிக்கை அளித்தது. 'என் மேலுள்ள வழக்குகளை
வாபஸ் வாங்கிவிட்டால் போதும், அ.தி.மு.க-வுக்கு வந்து விடுகிறேன்’ என்றேன். அம்மா
அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு என்னை அரவணைத்துக்கொண்டார்''
''இப்போ
வைகோவைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?''
''எக்காலத்திலும்
ம.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாது. வைகோ எப்பவும் பிராக்டிகலா
சிந்திக்கமாட்டார். இல்லைனா மதுக்கடையை மூடணும்னு நடந்துக்கிட்டிருப்பாரா? மதுவை
ஒழிக்கணும்னா என்ன செய்யணும்? கிராமங்களில் குடிகாரர்களைச் சந்தித்து கவுன்சிலிங்
கொடுக்கணும். அதை விட்டுட்டு எதுக்கெடுத்தாலும் நடந்தா அது கிறுக்குத்தனம்தான்.
இப்படிப்பட்ட ஒருவரின் கட்சியில் என் இளமைக் காலத்தை இழந்துவிட்டதுதான் நான் செய்த
தவறு. தி.மு.க-வைப் பிடிக்காததுபோல் பேசுவார். ஆனால், இன்னமும் கனிமொழி,
ராசாத்தியோடு தொடர் பில்தான் இருக்கிறார். அதனால்தான், 2ஜி ஊழலில் கனிமொழியின்
பங்கு பற்றி நான் மேடையில் பேசியதைக் கண்டித்தார்.''
'' சரி,
பகுத்தறிவுவாதியான நீங்கள், குங்குமம் பூசி கோயிலுக்கெல்லாம் செல்ல
ஆரம்பித்துவிட்டீர்களாமே?''
''நான்
நாத்திகவாதினு எவன் சொன்னது? நான் எப்பவுமே கோயிலுக்குப் போவேன். சாமி
கும்பிடுவேன். தமிழ் மக்களின் பண்பாட்டில் கடவுள் நம்பிக்கையை என்றைக்கும் ஒழிக்க
முடியாது. பெரியாருடைய பல நல்ல விஷயங்கள் தோற்றுப் போனதற்குக் காரணம், அவர், கடவுள்
இல்லைனு சொன்னதுதான்!''
பக்கா அ.தி.மு.க.
ஆளா மாறிட்டாருங்கோ!
/thedipaar thanks
|
No comments:
Post a Comment