மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை - வரிகொடா இயக்கம் ஆரம்பம்! பிபிசிக்கு செவ்வி
24 March 2013
ஈழத்தமிழர்களுக்கு
ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான
வரிகொடா இயக்கம் நடத்தப் போவதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச்
சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன்
தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு
வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பல்வேறு போராட்டங்களை
முன்னெடுத்ததைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளையும் மூடும்படி மாநில அரசு
உத்தரவிட்டிருந்தது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த கல்லூரிகளை
மீண்டும் திறக்க மாநில அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள்
வெளியாகியிருக்கும் பின்னணியில், தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன
என்று போராடும் மாணவர்களுக்கான அமைப்பாக உருவாகியிருக்கும் அமைப்புக்களில் ஒன்றான
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர்
ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் பிபிசிக்கு அளித்த செவ்வியில் விளக்கினார்.
போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டு
கொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவண் அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும்
வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று கூறிய செம்பியன், இதற்காக
மாநிலம் தழுவிய அளவில் பரப்புரை செய்யப் போவதாக கூறினார். அதேபோல், ஐநா மன்றத் தீர்மானத்தில் இலங்கைக்கான
சர்வதேச விசாரணை தேவை என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை உள்வாங்காத அமெரிக்க
அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்
பிபிசியிடம் கூறினார். nk /thedipaar thanks
No comments:
Post a Comment