18 Mar 2013 
புதுடெல்லி:‘அடுத்த ஆண்டு (2014) பாராளுமன்ற
தேர்தலுக்கு பின் மத்திய அரசு அமைப்பதில் என் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்’
என்று பீகார் முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார்
கூறினார்.
பீகார் மாநிலத்துக்கு ‘சிறப்பு மாநில அந்தஸ்து’
அளிக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி
தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் ’பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து
கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’ ஒன்றுக்கு நிதிஷ்குமார் டெல்லியில் ஏற்பாடு
செய்து இருந்தார். ‘அதிகார்’ என்ற இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் டெல்லி
ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்தது. லட்சக்கணக்கான பீகார் மக்கள் கலந்து கொண்ட
இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:
பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட
வேண்டும் என்று பீகார் மாநில மக்கள் பிச்சை கேட்கவில்லை என்பதை மத்திய அரசு உணர
வேண்டும். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்பது
பீகார் மக்களின் கடமை.
லட்சக்கணக்கான பீகார் மக்கள் தங்களின் கல்வி,
மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவையான வாழ்வாதார வசதிகள் தேடி பீகாரை விட்டு
வெளியேறி வெளி மாநிலங்களுக்கு அகதிகள் போல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
பழங்காலத்தில் அதிகாரத்திலும், கல்வியிலும் பீகார் மைய அச்சாக விளங்கி வந்தது.
உலகத்தின் மிகப்பெரிய நாளந்தா பல்கலைக்கழகம் பீகாரில்தான் இருந்தது. ஆனால்,
இன்றைக்கு இந்த மாநிலம் அனைத்து வகையிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு
வருகிறது.
ஒரு மாநிலம் (குஜராத்) நல்ல வளர்ச்சி அடைந்து
உள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். அங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக ஒரு மாயையை,
யானையைப் பிடிக்க ஒரு குழி தோண்டி இலை, தழைகளால் மூடப்பட்ட இருப்பது போல் பொய்யான
ஒரு தோற்றத்தை காண்பித்து உள்ளனர். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து
பாருங்கள், பின்னர் உண்மையான வளர்ச்சி, முன்னேற்றம் எந்த மாநிலத்தில் ஏற்பட்டு
உள்ளது என்பதை பார்ப்பீர்கள். பீகார் மாநிலத்தில் வேகமான முன்னேற்றம் ஏற்பட
வேண்டுமானால் மத்திய அரசு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்தே தீர வேண்டும்.
உலகத்துக்கு நாங்கள் ஒரு மாதிரியை கொண்டு வருவோம். அதுதான் இந்தியாவின் உண்மையான
வளர்ச்சியாக, மாதிரியாக இருக்கும்.பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிப்பதில்
மத்திய அரசு சாதகமான முடிவு எடுத்தாலும், பாதகமான முடிவு எடுத்தாலும் அது 2014
பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
அப்படி நீங்கள் (மத்திய அரசு) இப்போது சிறப்பு
மாநில அந்தஸ்து அளிக்கவில்லை என்றால், 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர்
நீங்கள் அளித்தே தீர வேண்டும். அதற்கான ஒரு சூழ்நிலை 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப்
பின்னர் டெல்லியில் ஏற்பட்டே தீரும். பின்தங்கிய மாநிலங்கள், வளர்ச்சி அடையாத
மாநிலங்கள், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள் என்று யார்–யார்
நினைக்கிறார்களோ அவர்கள் டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வார்கள்.
இதில், மத்தியில் ஆட்சி அமைப்பதில் எனது பங்கு மிக
முக்கியமானதாக இருக்கும். என்னை புறக்கணித்து விட்டு மத்தியில் ஆட்சி அமைக்க
முடியாது. பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை எங்களின் போராட்டம்
தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுடன் ஐக்கிய ஜனதா
தளம் இடம் பெற்றுள்ளது. ஆனால், அந்தக் கட்சி நடத்திய இந்தப் பேரணியில் பா.ஜனதாவை
நிதிஷ்குமார் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.thoothuonline. thanks
No comments:
Post a Comment