March 2013 23:33

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை, சர்வதேசம் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நண்பகல் தீக்குளித்த சமூக ஆர்வலரும், முன்னாள் இந்திய இராணுவ வீரருமான இளமணி (41) நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மணி என்பவரை தீக்காயங்களுடன் மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
உயிருக்கு போராடிய நிலையிலும் 'இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழர்களுக்காக எனது உயிரை கொடுப்பதில் பெருமை அடைகிறேன்' என அவர் தெரிவித்திருந்தார்.
அவர் உயிரிழந்த பிறகு, சம்பவ இடத்தில் அவர் முன்னர் எழுதி வைத்திருந்ததாக நம்பப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அக்கடிதத்தில், ஈழத்தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை அதிபர் ராஜபக்ச ஒழிக என எழுதப்பட்டு பின்வருமாறு தொடர்கிறது.
வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது. இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.
சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11–ந் தேதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மரணத்திற்கு பிறகு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.
மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும். மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என் நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment