ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம்களுக்குமிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி பொது மக்களை பலிவாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இதலைநகர் பாக்தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம்களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வரும்போது ஒரு குண்டு வெடித்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி நின்ற போது, அங்கு இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 57 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், தெற்கு பாக்தாத்தில் சன்னி முஸ்லிம் ஒருவரின் இறுதிச்சடங்கு நடந்த இடத்தின் அருகே குண்டு வெடித்தது. இதில் 8 பேர் இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நேற்று கிர்குக், பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள ஷியா மசூதிகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். சன்னி பிரிவு எம்.பி.யின் சகோதரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பகுபா நகரில் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலையடுத்து இரு பிரிவினரிடையே உள்ள மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
No comments:
Post a Comment