July 3, 2013 02:25 pm
அவுஸ்திரேலியாவில், சமீபத்தில் ஆளும் கட்சியான தொழிற்சங்க கட்சியில் நடைபெற்ற உள்கட்சி வாக்கெடுப்பில் கெவின் ருத் வெற்றி பெற்று நேற்று பிரதமராகப் பதவி ஏற்றார். அவருடன் மற்ற அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவர்களில் 43வயதான இஸ்லாம் மதத்தை சேர்ந்த எட் ஹூசிக்கும் ஒருவர் ஆவார். இவர் பிரதமரின் பாராளுமன்ற செயலராகவும், பிராட்பேன்ட் துறையின் பாராளுமன்ற செயலாளராகவும் பதவி ஏற்றுக் கொண்டார்.
போஸ்னியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறிய தம்பதிகளுக்கு பிறந்தவர் ஹூசிக் ஆவார். இவர்தான் இந்தக் கூட்டாட்சியில் முதன்முதலாக குர்ஆனின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இன்று பத்திரிகையாளர்களிடம் அதுபற்றிக் கூறும்போது, இஸ்லாமிய மதத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிமாகத் தான் ஒரு நேர்மையான முடிவினை எடுத்ததாகத் தெரிவித்தார். பைபிள் மீது உறுதிமொழி எடுத்து உறுதிப்படுத்துவதற்கு தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
திங்களன்று உறுதிமொழி எடுத்தபோதும், அவுஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் குவெண்டின் பிரைஸ் பன்முகக் கலாச்சாரத்தினை எடுத்துக்காட்டும் வகையில் இது ஒரு சிறந்த நாளாகும் என்று குறிப்பிட்டார்.
ஆயினும் ஹூசிக்கின் இணையதள பக்கத்தில் அன்று அவருக்கு வந்த விமர்சனங்கள் அனைத்தும் இவரது செயல் அவுஸ்திரேலிய குடிமகன் போல் இல்லை எனவும், குர்ஆனின் மீது உறுதிமொழி எடுத்தது குறித்தும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தன.
இந்தக் கருத்துகளை ஜனநாயகத்தின் இயற்கை வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய ஹூசிக், இருண்ட மூலையிலிருந்து வெளிவரும் கடுமையான வார்த்தைகளுக்காக நாம் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரான டோனி அப்போட், ஹூசிக்கின் செயலைத் தான் மதிப்பதாகவும்,அவுஸ்திரேலிய மக்களும் அவ்வாறே செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் பலர், அவர் இதுபோன்ற இனத்துவேஷமான கருத்துகளை ஒதுக்கவேண்டும் என்று கூறி அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்.
news thamilan thanks
No comments:
Post a Comment