ஜனவரி 22, 2013 at 8:30:32 AM
கர்நாடகா தண்ணீர் தர மறுத்ததாலும், பருமழை பொய்த்துப் போனதாலும் டெல்டா மாவட்டங்கள் வறண்டு போயின. இதனால் காவிரி டெல்டாவில் மட்டும், கடந்த சில மாதங்களில் விவசாயிகள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். சம்பா கருகியதாலேயே விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறினர். அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பதில் அளித்த தமிழக அரசு, விவசாயிகளின் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன் கூறுகையில், சம்பா, தாளடி சாகுபடிக்கு வடகிழக்குப் பருவ மழையையே விவசாயிகள் நம்பி இருப்பதாக அரசு தெரிவித்து இருப்பது, காவிரி வழக்கில் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். எனவே, விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, வரும் 31-ந் தேதிக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்:இதனிடையே டெல்டா பகுதியைப் போன்றே தமிழகத்தின் பிற பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனப் பேரணி நடத்தினர். இதே காரணத்தை வலியுறுத்தி, திருவாரூரில் திமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற கண்டனப் பேரணி திருச்சியில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், டெல்டா பகுதிகளில் மட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு இந்த பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்ட திமுகவினர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாகை எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment