Thursday, March 21, 2013
முக ஸ்டாலின்
வீடு உள்பட 32 இடங்களில் சிபிஐ ரெய்ட்… உதயநிதியின் ஹம்மர் கார்
பறிமுதல்!
வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.
இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடந்ததாக 3 ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறையி்ன் புலனாய்விப் பிரிவான டிஆர்ஐ (Department of revenue intelligence) விவகாரத்தைக் கிளப்பியது.
அப்போதே அதற்கான விளக்கத்தை ஸ்டாலின் தரப்பு தந்துவிட்டது. இந் நிலையில் கார் இறக்குமதி நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் வீடு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
இதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பழிவாங்கல்
இந்த சோதனை திட்டமிட்ட அரசியல் பழி வாங்கல் என்று திமுக தலைவர் மு கருணாநிதி கூறியுள்ளார்.
சோதனை நடந்த போது வீட்டுக்கு வெளியே நின்று நிருபர்களிடம் பேசிய முக ஸ்டாலின், “கூட்டணியை விட்டு வெளியே வந்த இரண்டு நாட்களுக்குள் இப்படி
ஒரு சோதனை. அதுவும் எப்போதோ வாங்கிய காருக்கு. இது எதற்காக என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்”, என்றார் .
ப சிதம்பரம் எதிர்ப்பு
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம்.
இதுபற்றி அவர் கூறுகையில், “ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது பற்றி சற்று நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தகவல் கிடைத்தது. நான் வழக்கமாக பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் (நாராயணசாமி) பேசியிருக்கிறேன். இந்த சோதனையை நான் எதிர்க்கிறேன். சிபிஐயின் இந்த செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும்,” என்றார்.
இரு தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது திமுக. ஈழப் பிரச்சினையில் மாணவர் போராட்டங்கள் மக்கள் இயக்கமாக மாறியுள்ள நிலையில், திமுக தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்ட் வந்திருப்பது திமுகவுக்கு பெரும் உதவியாக அமையும் என்பது சிதம்பரம் கருத்து.
-என்வழி செய்திகள் thanks
No comments:
Post a Comment