சென்னை, மே.- 5 - பணியின்போது அகால மரணமடைந்த 6 காவல் துறையைச் சேர்ந்த 6 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகர காவல், சென்னை மத்திய குற்றப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த கிருஷ்ணகுமார் 25.4.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வந்த வைகுண்டமணி 25.4.2013 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்குளம் - ஊத்துமலை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த டானக்கண் ஜெயசிங் 27.4.2013 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த மு.கோவிந்தராஞு 28.4.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமாரசாமி 30.4.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், குன்றத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராஜேந்திரன் 1.5.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஞு, குமாரசாமி, தலைமைக் காவலர்கள் கிருஷ்ணகுமார், டானக்கண் ஜெயசிங், ராஜேந்திரன் மற்றும் காவலர் வைகுண்டமணி ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாரடைப்பால் காலமான காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கோவிந்தராஞு, தலைமைக் காவலர்கள் கிருஷ்ணகுமார், டானக்கண் ஜெயசிங், உடல்நலக் குறைவால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரசாமி, தலைமைக் காவலர் ராஜேந்திரன் மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் வைகுண்டமணி ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
thinaboomi thanks
No comments:
Post a Comment