July 4, 2013 02:59 pm
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்கள் அழிந்து விட்டன. தோர்நாத்தில் சிவன் கோவில் மட்டும் உள்ளது. கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
லட்சக்கணக்கான மக்கள் வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். சமோலி உள்ளிட்ட 3மாவட்டங்களில்900 கிராமங்கள் அழிந்து விட்டன. பல கிராமங்கள் சாலையின்றி துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி விட்டனர். மீட்பு பணி முடிந்து விட்ட நிலையில் 7ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கதி என்ன என்று தேடி வருகிறார்கள். வெள்ளத்தில் மாயமானவர்களில் 1227 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் போலீசில் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு மாதத்துக்குள் மீட்கப் படாவிட்டால் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதல்-மந்திரி விஜய் பகுகுணா கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மழை மிரட்டத் தொடங்கி இருப்பதால் மீட்பு பணிகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
thamilan. thanks
No comments:
Post a Comment