ஏறாவூர்
அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பிரதம அதிதியா கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். நேற்று
நூற்றாண்டு விழா அங்குரார்ப்பண வைபவத்தை ஆரம்பித்து வைக்குமுகமாக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச, ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அல்ஹாஜ் அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின்
பேரில் வருகை தந்தார். ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், அன்பான பிள்ளைகளே
கல்விதான் பெரிய செல்வம். அறிவுதான் பெரிய ஆயுதம். நான் தமிழில் சொன்ன இந்த அற்பு
வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டாலும் அது தகும். எனவே,
நீங்கள் கல்வி கற்க வேண்டும்.
அதைத்தான்
நான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லுவேன். பயங்கரமான இருள் சூழ்ந்த ஒரு
யுகம் இனித் தோன்றப் போவதில்லை என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கின்றேன். இன்று
அலிகார் தேசியக் கல்லூரியின் நூறு வருடப் பூர்த்தி விழாவில் கலந்து கொண்டு உங்கள்
முன்னால் நின்று பேசுவது எனக்குப் பெரிய சந்தோசத்தைத் தந்திருக்கின்றது. இது நூறு
வயதைக் கடந்த ஒரு பாடசாலை. இந்தப் பாடசாலையில் கற்ற பலர் இந்த நாட்டுக்கு நன்மை
பயக்கின்றவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்தக் கல்லூரியின் பழைய மாணவன் அலிஸாஹிர்
மௌலானா எனது நல்ல நண்பர்.
அவரது
அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கின்றேன். அலிகார் என்று கூறும்பொழுது அது ஒரு
பல்கலைக்கழகம். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் இங்கு வந்த பொழுது பல்கலைக்கழகம்
என்ற பெயரைத்தான் இந்தத் தேசியக் கல்லூரிக்குச் சூட்டியிருக்கின்றார்கள். அப்பொழுது
அவர் கல்வியமைச்சராக இருந்து எமது நாட்டுக்குச் சேவை புரிந்தார்கள். இது 1970 களில்
நடந்த வரலாறு. மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்களுடன் நானும் ஒரு சேர 1970 இல்
இருந்து 1977 வரைப் அப்போதைய பாராளுமன்றத்திலே வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக
இருந்துள்ளேன்.
மர்ஹும்
பதியுதீன் மஹ்மூத் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதில் இந்தப்
பகுதிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை
நாங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே, இங்கு
அமர்ந்திருக்கக் கூடிய இளைஞர் சமுதாயத்தனரான பாடசாலை மாணவியர்களாகிய நீங்கள் இந்தக்
கல்லூரியையும் கல்வி வளத்தையும் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். நீங்கள்
தான் இந்த நாட்டிலே ஒற்றுமை சமாதானம் சகவாழ்வு எல்லாவற்றையும் பாதுகாக்க
வேண்டியவர்கள்.
இந்த
அலிகார் தேசியக் கல்லூரிக்கு ஒரு இருள் சூழ்ந்த காலம் இருந்தது. இந்தப் பாடசாலையைத்
தொட்டாற்போல ஏறாவூர் பொலிஸ் நிலையம் இருந்தது. அதனால் அந்தக் காலத்திலே இந்தப்
பொலிஸ் நிலையம் புலிகளால் தாக்கப்பட்டபோது இந்தப்பாடசாலைக்கும் சேதங்கள் ஏற்பட்டதாக
எனக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆயினும், அப்படிப்பட்ட அன்று நடந்ததைப் போன்ற
பயங்கரமான இருள் சூழ்ந்த ஒரு யுகம் இனித் தோன்றப் போவதில்லை என்று நான்
உங்களுக்குத் திட்டவட்டமாகக் கூற முடியும். எனவே, என் அன்பான மாணவ மணிகளே இனிமேல்
நீங்கள் எந்தப் பயமுமில்லாமல் உங்களது கல்வியைத் தொடரமுடியும் எனத்தெரிவித்தார்.
கல்லூரியின்
முதல்வர் அல்ஹாஜ்.எஸ்.ஏ நஜீப் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில், கிழக்கு மாகாண
முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், உற்பத்தி ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பசீர்
சேகுதாவூத், கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்ரம, பொருளாதார அபிவிருத்தி
பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர்
அஹமட் மற்றும் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், அரசாங்க அதிபர்
திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் முன்னாள் வலயக்
கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப்
பணிப்பாளர்களான எஸ்.எம்.அமீர், ஸ்.ஏ.நஸீரா உட்பட நகரசபை உறுப்பினர்கள் ஊர்
பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது பாடசாலையின் நூற்றாண்டு விழா
முத்திரையை கிழக்கு மாகாண தபால் மா அதிபர் கே.விமலநாதன் ஜனாதிபதிக்கு வழங்கி
முத்திரை வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.
eutamilar thanks
No comments:
Post a Comment