தி.மு.க. வின் எச்சரிக்கையை தொடர்ந்து நாளை அவசரமாக கூடுகிறது சோனியா கந்தியின் தலமையிலான காங்கிரஸ் கட்சி
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013,
இலங்கையில் கடந்த 2009-ம்
ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் சிங்கள
ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச
கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த
கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை
கவுன்சில் கூட்டத்தில், போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வரைவு
தீர்மானம் தாக்கல் செய்து உள்ளது. திருத்தங்களுக்கு பின் அந்த தீர்மானத்தின் மீது
வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்று ஓட்டெடுப்பு நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தில்
சில திருத்தங்களை கொண்டு வந்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர்
கருணாநிதி வற்புறுத்தி உள்ளார். அதாவது இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்களை போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்துமாறும்,
போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுயேச்சையான பன்னாட்டு விசாரணை ஆணையம்
அமைக்கும் வகையிலும் திருத்தம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அவர் மத்திய அரசை வற்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்
சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் கடிதம் எழுதி
இருக்கிறார். அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா மேற்கண்ட திருத்தங்களை கொண்டு
வராவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. நீடிக்காது என்றும் கருணாநிதி
எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனால், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை
என்னவாக இருக்கும்? என்று எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை)
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவை (எம்.பி.க்கள் கூட்டம்) கூட்டி
முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள
எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்.பி.க்களின்
கருத்துகளை அவர் கேட்டு அறிகிறார்.
இத்தாலி நிறுவனத்திடம் இருந்து மிகமிக
முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல், மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் சிக்கிய தங்கள்
கடற்படை வீரர்களை இத்தாலி அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுத்து விட்டதால்
எழுந்துள்ள பிரச்சினை ஆகியவை குறித்தும் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
நடத்துகிறார்
No comments:
Post a Comment