மதுரவாயல் ஏரிக் கரையை சேர்ந்தவர் சக்ரபாணி. இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார்.
இவரது மகன் கார்த்திக் நேற்று இரவு 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து தங்களுக்கு சொந்தமான லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு மதுரவாயல் நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுரவாயல் அருகே பரணி புத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது லாரி பழுதாகி விட்டது.
இதையடுத்து கார்த்திக் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு மதுரவாயலுக்கு சென்றார். பின்னர் தனது தந்தை சக்ரபாணி மற்றும் மெக்கானிக் கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு லாரியை பழுது பார்ப்பதற்காக சென்றார். மேம்பாலத்தில் லாரியின் பின்னால் தரையில் அமர்ந்தபடி மெக்கானிக் கார்த்திக், லாரியை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அசோக்குமாரும் கீழே அமர்ந்து அவருக்கு உதவி செய்தபடி இருந்தார்.
சக்ரபாணி, லாரியின் ஓரமாக நின்று கொண்டு வாகனங்களுக்கு சைகை காட்டியபடி நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த இன்னொரு டிப்பர் லாரி, மின்னல் வேகத்தில் பழுதான லாரியின் பின்னால் மோதியது. இதில் பயங்கர சத்தத்துடன் மோதிய லாரியின் முன்பகுதி அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் விரைந்து சென்று 2 லாரிகளுக்கும் இடையில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதில் மெக்கானிக் கார்த்திக்கும், அசோக்குமாரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
தனது கண் எதிரிலேயே மகன் பலியானதை பார்த்து அசோக்குமாரின் தந்தை சக்ரபாணி கதறி அழுதார். இந்த விபத்தில் மோதிய லாரியின் டிரைவரான மதுராந்தகத்தை சேர்ந்த ரஞ்சன், கிளீனர் ஜெகன் ஆகியோரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை 108 ஆம்புலன்சில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடைபெற்ற பாலத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற பாலங்களில் போதிய விளக்கு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment