சென்னை: "மரக்காணம் சம்பவத்தில்
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
என்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி
எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர்
பெருவிழா மாநாடு கடந்த 25ம் தேதி நடத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக
மாமல்லபுரம் மாநாட்டிற்கு வன்னியர் சங்கத்தினர் வந்த போது மரக்காணத்தில் கலவரம்
ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் வாகனங்களும் தீயில் எரிந்து நாசமடைந்தன.
தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கூனிமேடில் பள்ளிவாசல்
மீதும் முஸ்லிம்களின் கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் "சாதி
வெறியைக் கிளப்பி விடும் வகையில், தலித் மக்களுக்கு எதிராக வன்முறையைத்
தூண்டும் விதத்தில்" வன்னியர் சங்க தலைவர்கள் பேசியுள்ளனர். தமிழகத்தில் நிலவி
வரும் சமூக அமைதியை சிதைக்கும் வகையில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் ஆற்றப்பட்ட
உரைகளையும் அதன் அடிப்படையில் நடைபெற்ற வன்முறைகளையும் வன்மையாக
கண்டிக்கிறேன்.
மரக்காணம் சம்பவத்தில் வாகன விபத்தில்
இருவர் உயிர் இழக்க அதனை கொலையாக சித்தரித்து, மேலும் சிலர் வன்முறைகளை
தூண்டி வருகின்றனர். இதன் விளைவாக வந்தவாசியில் இரு தலித் இளைஞர்கள் மீது
கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சாதி வெறியைத் தூண்டி வன்முறைக்கு தூபம்
போட்டு பேசுபவர்கள் மீதும் வன்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிவெறியின் அடிப்படையில் தமிழர்களை
பிளவுப்படுத்தும் வகையில் வெறிப்பேச்சுகளும் வன்முறைகளும் தொடராமல்
இருப்பதற்கு தமிழக அரசு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்செயல்கள்
மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக தகுந்த
நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
lankasri thanks
No comments:
Post a Comment