June 27, 2013
உத்தரகண்ட் மாநிலம், பழைய நிலையை அடைய, இன்னும், மூன்றாண்டுகள் ஆகும்.சேதத்தின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என,அம்மாநில காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா கூறினார்.
முன்கூட்டியே துவங்கிய பருவ மழை, உத்தரகண்ட் மாநிலத்தை உலுக்கி எடுத்து விட்டது. இயல்பாக, கடந்த, 22ம் தேதி துவங்க வேண்டிய தென் மேற்கு பருவ மழை,கடந்த, 15ம் தேதியே துவங்கியது. துவங்கிய வேகத்தில், பேய் மழையாக உருவெடுத்து,இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்தது.இதில், வரலாறு காணாத சேதத்தை அந்த மாநிலம் சந்தித்தது.
முக்கிய வழிபாட்டுத் தலங்களான, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இடங்கள், பலத்த சேதமடைந்தன. அந்த இடங்களுக்கு வழிபட சென்ற, லட்சம் பேரில், 1,000 பேர் இறந்துள்ளனர்; இன்னும், 4,000 பேரை காணவில்லை. காடுகளிலும்,மலைகளிலும் தத்தளித்த, 95 ஆயிரம் பேர், ஹெலிகாப்டர்களில் மீட்கப்பட்டு உள்ளனர். இன்னமும், 5,000பேர், அவர்களின் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.சாலைகள் துண்டாகிப் போனதால், தரை வழி போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால்,விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மட்டுமே, போக்குவரத்தாக மாறியுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சேதம் குறித்து,முதல்வர், விஜய் பகுகுணா கூறியதாவது: எங்கள் மாநிலத்தில், கடந்த நூறு ஆண்டுகளில் இது போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை. சில மணி நேரங்களில், 330 மி.மீ., மழை பெய்துவிட்டது. அந்த பேய்மழை, 37 ஆயிரம் சதுர மைல் பரப்பளவில் கொட்டியதால் தான், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது.எங்களின் இப்போதைய கணிப்பு படி, 3,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது;இதிலிருந்து மீள, இன்னும், மூன்றாண்டுகள் ஆகும் என, நினைக்கிறேன். விமானப் படையினர், இன்னும், ஒரு மாதத்திற்காவது இங்கே இருக்க வேண்டும் என,விரும்புகிறேன். இவ்வாறு, முதல்வர், விஜய் பகுகுணா கூறிஉள்ளார்.
மீட்கப்பட்டவர்களை, கவுரிகுந்த் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர், நேற்று முன்தினம் விபத்துக்கு உள்ளானதால், தடை பட்டிருந்த பணி,நேற்று காலை முதல் துவங்கியது.கேதார்நாத் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், தத்தளித்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் என அனைவரும்,ஹெலிகாப்டர்களில் ஏற்றி, சிம்லா, டேராடூன் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால்,பத்ரிநாத் பகுதியில், 4,000 பேரும், கங்கோத்ரி அருகில் உள்ள ஹர்சில் என்ற இடத்தில், 1,000 பேரும், இன்னும் மீட்கப்பட வேண்டிஉள்ளதாக,நேற்று செய்திகள் வெளியாகின.
அந்த இடங்களில் இருந்து, அவர்களை அப்புறப்படுத்தும் பணியில்,விமான படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே,பேரிடர் மீட்புப்படை வீரர்கள்,மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் நடந்து சென்று, யாராவது தத்தளிக்கின்றனரா என,அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து வருகின்றனர்.கேதார்நாத் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையைப் போல், பிற பகுதிகளிலும் மேற்கொள்ள விரிவான திட்டங்களை, மீட்புப் படையினர் பின்பற்றியுள்ளனர்.
thamilan thanks
No comments:
Post a Comment