சென்னை: ""மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருளாதார வளம் மட்டும் போதாது; அமைதியும் அவசியம். இதற்கு சமூகத்தின் நாகரிக வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின், ஏழாவது பட்டமளிப்பு விழா, கவர்னர் ரோசய்யா தலைமையில், சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் வரவேற்றார். சட்டக் கல்வியை முடித்த, 824 மாணவர்கள், பட்டங்களை பெற்றனர்.
இவர்களுக்கு, பட்டங்களை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: பல்வேறு நெறிமுறைகளை பின்பற்றி நாகரிகமாக வாழ்வதே, சிறந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டு. இதற்கு, வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில், புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அனைத்து துறைகளிலும், சட்டத்தின் பங்கு மிக முக்கியம். வாழ்வியலிலும் இது வெளிப்படுகிறது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, உறுப்பு தானம் மிக முக்கியமானது. இந்தியாவில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, தனிச் சட்டம் உள்ளது. இதில், புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். உறுப்பு மாற்றத்திற்கு, தாய் மண்ணைச் சேர்ந்தவர்களுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். இதே போல, மரபணுக்கள் உருவாக்கத்திலும், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மரபணுக்கு யார் சொந்தக்காரர் என்பதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றை எல்லாம் போக்கி, சமூக வாழ்வுக்கு உகந்ததாக, சட்டங்களை உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம், வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. இதற்கேற்ப, வான்வெளி மற்றும் "சைபர்' சட்டங்களை உருவாக்க வேண்டும். கடல்சார் சட்டங்களிலும், புதிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஒரு நாடு, பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டால் மட்டும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்து விடாது. சமூகத்தில் அமைதி நிலவும் போது தான், மகிழ்ச்சி கிடைக்கும். பொருளாதாரத்தில் வளர்ந்த பல நாடுகளில், அமைதியில்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம். எனவே, அமைதியான சமூகத்தை உருவாக்குவதில், இளம் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
விழாவில், சட்ட பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் பேசியதாவது: கடல் சார்ந்த சட்டங்களை மாணவர்கள் கற்கும் வகையில், முதுகலை டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின், பொது முன்னேற்ற உதவித் திட்டத்தின் கீழ், சட்ட பல்கலைக்கு, 8.62 கோடி ரூபாய் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
உஷாரான சட்ட பல்கலைக்கழகம்:
கடந்தாண்டு நடந்த, சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், பல்வேறு மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; மாணவர்களும் குவிந்தனர். 20 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு, விழாவும் முடிந்தது. வெளியூரிலிருந்து வந்திருந்த மாணவர்கள், "பட்டங்கள் வழங்கினால் மட்டுமே செல்வோம்' என, போராட்டத்தில் குதித்தனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு பட்டங்களை கொடுத்த பின், அவர்கள் கலைந்து சென்றனர். இது போன்ற பிரச்னை, இந்தாண்டு நடக்காமல் இருக்க, மிகக் குறைவான மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். விழா, மாலை, 4:15 மணிக்கு துவங்கி, 5:00 மணிக்குள் முடிவடைந்தது.
dinamalar thanks
No comments:
Post a Comment