26 Mar 2013 
புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி
மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் போலீஸ் சுட்டுக் கொலைச் செய்த 6 முஸ்லிம்களில் 4 பேர்
பின்னால் இருந்து சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்று போஸ்ட் மார்ட்டம்
அறிக்கை கூறுகிறது.
மக்கள் தாக்கியபொழுது தற்காப்பிற்காக சுட்டதாக
போலீஸ் கூறுவது வடி கட்டிய பொய் என்பது துலேயில் பி.ஹெச் அரசு
மருத்துவக்கல்லூரியில் நடத்திய போஸ்ட் மார்ட்டம் அறிக்கை
வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கலைந்து சென்று கொண்டிருந்த மக்களை போலீஸ் பின்னால்
சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்பதற்கான ஆதாரம் இது என்று தடவியல்
நிபுணர்கள் கூறுகின்றனர்.
இம்ரான் கமர் அலி, ஷேக் அஸீம் ஷேக் நஸீர், ஸைத்
பட்டேல் ரயீஸ் பட்டேல் ஆகிய 3 பேருக்கு தோளின் பின்பகுதியில் தோட்டா துளைத்து
நெஞ்சு வழியாக வெளியேறியுள்ளது. ஆஸிஃப் இக்பால் நயீம் அன்ஸாரி என்ற இளைஞருக்கு
முதுகெலும்பில் தோட்டா துளைத்துள்ளது. கழுத்தில் தோட்டா பாய்ந்து யூனுஸ் ஷா என்ற
இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தொடையில் தோட்டா பாய்ந்த பொழுது முஹம்மது ரிஸ்வான் ஷா
என்ற இளைஞரும் மரணித்துவிட்டார்.
மக்கள் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு
நடத்தவேண்டும் என்ற சூழல் உருவானால் ஆபத்து ஏற்படாத வகையில் துப்பாக்கிச்சூட்டை
நடத்தவேண்டும் என்று மஹராஷ்ட்ரா போலீஸ் கையேடு(மானுவல்) கூறுகிறது. அதுமட்டுமல்ல,
மக்கள் கூட்டம் கலைந்து செல்ல துவங்கினால் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும்
மானுவல் கூறுகிறது. இவையெல்லாம் மீறப்பட்டுள்ளன என்பதை போஸ்ட்மார்ட்டம் அறிக்கை
கூறுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க டி.ஜி.பி சஞ்சீவ்
தயாள் மறுத்துவிட்டார். அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில்
சாப்பிட்டுவிட்டு காசு செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு போலீஸ் தலையீட்டால்
கலவரமாக மாறியது. ஆறு அப்பாவி முஸ்லிம்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்
கொல்லப்பட்டனர். கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு
துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சொத்துக்களைகொள்ளையடித்தது. இதுத்தொடர்பாக பல்வேறு
வீடியோ காட்சிகள் வெளியாகின. போலீஸில் உள்ள வகுப்புவாதிகள் தாம் கலவரத்திற்கு
காரணம் என்று அரசு கருத்து தெரிவித்தது.
thoothuonline. thanks
No comments:
Post a Comment