மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உயிரிழந்த தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவியும் இரு மகள்களும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதி மேலவலசை கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மனைவி லதா (32). இவர்களது மகள்கள் ரூபாவதி (13),சுசிதா ரேவதி (10). தர்மராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அங்கேயே பணிபுரிந்த அவர் சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 26.5.2013 ஆம் தேதி தனது மனைவி லதாவிடம் தன்னிடம் 15 பவுன் தங்க நகைகளும், ரூ. 6லட்சம் ரொகக்கமும் இருப்பதாக செல்போனில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் எனக்கும் என்னோடு தங்கி இருக்கும் வீரசிங்கம், சுகு, பத்மனாபன் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது என்றும், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் மதியம் 12.30 மணிக்கு அவரது நண்பரான சசி என்பவர் லதாவிடம் உங்கள் கணவர் இறந்து விட்டார். அவரது உடலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர் என்றும் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை என்றும் கூறினாராம்.
இதையடுத்து, லதா தனது இரு மகள்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை நேரில் சந்தித்து கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறும், கணவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இந்திய தூதரகம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதாக லதா தெரிவித்தார்.
dinaman thanks
No comments:
Post a Comment