July 26, 2013 12:14 pm
இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், சென்னையில் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நேற்று (25ஆம் தேதி) நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், கருணாநிதி பேசுகையில், "தமிழ்நாட்டில் நான் சிறுவனாக இருந்து பார்த்த முஸ்லிம் லீக் இன்று இல்லை. பல பிரிவாக பிரிந்துவிட்டது. இஸ்லாம் சமுதாய பெருமக்கள்,முஸ்லிம் லீக் வரலாறு எத்தகையது, எப்படி உருவானது, தலைவர்கள் இந்த சமுதாயத்திற்காக எப்படி பணியாற்றினார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாவது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிறர் நெருங்க அஞ்சுவார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் இருந்து முதல் குரல் எழுப்பியது தி.மு.க.தான். எதையும் நான் மறந்துவிடவில்லை. இஸ்லாம் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறோம். தொடர்ந்து தொண்டாற்றுவோம்.
தி.மு.க. ஆட்சியில் இஸ்லாம் மக்களுக்காக பணியாற்றியது குறித்து ஒரு பட்டியலை தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக மிலாது நபி விடுமுறையை ரத்து செய்ததை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் கொண்டுவந்தோம். 1983ஆம் ஆண்டு உருது பேசும் முஸ்லிம் மக்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதன்பிறகு, சென்னையில் உள்ள கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் வைத்ததும் தி.மு.க. ஆட்சியில் தான். 1989ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பயன்பெறுவதற்காக சிறுபான்மையினர் நல ஆணையம் தொடங்கப்பட்டது. ஓய்வூதியம் பெரும் உலமாக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
1999ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான குலுக்கல் முறை ரத்து செய்யப்பட்டு,விண்ணப்பிக்கும் அனைவரும் ஹஜ் புனித பயணம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். அதே ஆண்டு தமிழக சிறுபான்மை மேம்பாட்டு கழகம் தொடங்கப்பட்டது.
சென்னையில் ரூ.58 லட்சம் செலவில் காயிதே மில்லத் மணி மண்டபம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான்.2007ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட 30 சதவீத ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நலனுக்காக தனி இயக்குனரகம் அமைக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு சீராப்புராணம் பாடிய உமருப் புலவருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டது. 2008–2009ஆம் ஆண்டு தமிழக திருமண பதிவு சட்டத்தில்,முஸ்லிம் மக்களுடன் விவாதித்து முறையான திருத்தம் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கான ஆட்சி,மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சி தி.மு.க. என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டு" என்று கருணாநிதி பேசினார்
thamilan thanks
No comments:
Post a Comment