[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர், 2014, ]
திருவனந்தபுரம் அருகே குடப்பனகுன்னு பகுதியில் பதிராப்பள்ளி என்ற இடத்தில் ஜவகர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 7–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் இந்த பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த சுமார் 123 மாணவ– மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியை சசிகலா என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இவரே இந்த பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். இவர்களின் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றி உள்ளனர்.
இந்த பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜோமோன்– சிமி தம்பதியின் 6 வயது மகன் அபிஷேக் என்பவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த வியாழக்கிழமை அபிஷேக் வகுப்பறையில் சக மாணவனிடம் பேசிக் கொண்டிருந்து உள்ளான்.
இது வகுப்பு ஆசிரியை தீபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இதுபற்றி பள்ளி முதல்வர் சசிகலாவிடம் புகார் செய்தார். அதற்கு சசிகலா அந்த மாணவனுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார்.
மனிதாபிமானம் உள்ள யாரும் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான தண்டனையை சிறுவன் அபிஷேக்குக்கு வழங்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி, அந்த பள்ளியின் பின்புறம் உள்ள நாய் கூண்டில் சிறுவன் அபிஷேக்கை அடைக்கும்படி, ஆசிரியை தீபாவிடம் பள்ளி முதல்வர் கூறினார். அவரும் உடனடியாக அபிஷேக்கை இழுத்துச் சென்றார்.
நாய் கூண்டில் இருந்த நாயை வெளியேற்றி விட்டு அந்த சிறுவனை நாய் கூண்டுக்குள் போட்டு பூட்டி விட்டு வகுப்புக்கு சென்றுவிட்டார். நாய் கூண்டில் அடைக்கப்பட்ட அந்த சிறுவன் கதறி துடித்துள்ளான். ஆனால் அவனுக்கு உதவ யாரும் இல்லாத சூழ்நிலையால் அவன், சுமார் 4 மணி நேரம் அந்த நாய் கூண்டிலேயே அவதிப்பட்டு உள்ளான்.
மதிய உணவின்போது, அதே பள்ளியில் படித்த அபிஷேக்கின் அக்கா தம்பியை தேடி வந்தபோது அவன், நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். பள்ளி முதல்வரிடம் சென்று தனது தம்பியை விடுவிக்கும்படி கெஞ்சினாள்.
அதன் பிறகு சிறுவன் அபிஷேக்கை நாய் கூண்டில் இருந்து விடுவித்துள்ளனர். மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் நடப்பதே வேறு என்று அக்காவையும், தம்பியையும் மிரட்டி உள்ளனர்.
அதன் பிறகு வீடு திரும்பிய அபிஷேக்கின் அக்கா, நடந்த கொடூர சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடப்பன குன்னு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையில் யு.கே.ஜி. மாணவன் நாய் கூண்டில் அடைக்கப்பட்ட கொடூர சம்பவம் பற்றி தகவல் பரவியதும், அந்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பள்ளி மீது செருப்பு, கற்களை வீசி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி முதல்வர் சசிகலாவை கைது செய்தனர். ஆசிரியை தீபா விடுமுறையில் சென்று இருந்ததால் போலீஸ் பிடியில் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட சசிகலாவை போலீசார் பள்ளியில் இருந்து வெளியே அழைத்து வந்தபோது அவரை தாக்க பொதுமக்கள் முயன்றனர். இதனால் போலீசார் போராடி சசிகலாவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
நாய் கூண்டில் மாணவன் அடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், கேரள கல்வி மந்திரி அஷ்ரப் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் அந்த பள்ளி அங்கீகாரம் இல்லாமல் 25 வருடமாக செயல்பட்டது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.
எனவே இதுபற்றி விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கல்வி மந்திரி உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த பள்ளிக்கு சீல் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் முரளிதரன் எம்.எல்.ஏ.வும் பாதிக்கப்பட்ட மாணவனை பார்த்து ஆறுதல் கூறினார்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அவர் வற்புறுத்தி உள்ளார்.
viyapu. thanks
No comments:
Post a Comment