SATURDAY, 29 NOVEMBER 2014 14:57
வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரான கனோவின் மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக்காக முஸ்லிம்கள் கூடியிருந்த மசூதி ஒன்றின் மீது இரு தற்கொலைக் குண்டு தாரிகள் தமது குண்டை வெடிக்கச் செய்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 120 பொது மக்கல் கொல்லப் பட்டிருப்பதாகவும் 270 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடித்துச் சிதறிய பள்ளி வாசலின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாலும் காயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாலும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. கனோ நகரம் நீண்ட காலமாகவே இஸ்லாமியப் போராளிக் குழுவான போக்கோ ஹராம் இன் அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அதன் மத்தியிலுள்ள மசூதி மீது நிகழ்த்தப் பட்ட கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலில் 3 ஆவது வெடிகுண்டு குறித்த மசூதிக்கு வெளியே பக்தர்களின் கூட்டத்துக்கு மத்தியில் வெடித்திருந்தது. நைஜீரியாவில் இரு கிழமைகளுக்கு முன்னர் தான் கனோ இளவரசரான முஹம்மட் சனுசி II என்பவர் தமது நகர மக்கள் சொந்த பாதுகாப்புக்காகக் கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும் இஸ்லாமியப் போராளிக் குழுவான போக்கோ ஹராமுக்கு எதிராக யுத்தம் செய்ய முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இவர் இந்த அழைப்பை விடுத்த இடம் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட மசூதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது அழைப்பின் எதிரொலி கனோ நகர மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததால் போக்கோ ஹராம் போராளிக் குழு இதற்குப் பலி வாங்கியிருக்கலாம் எனப் பெரும்பாலும் ஊகிக்கப் படுகின்றது.
இதேவேளை மேற்குலக ஊடகங்கள் நேற்றைய தாக்குதலில் கொல்லப் பட்ட மக்களின் 94 சடலங்கள் முர்ட்டலா மொஹம்மெட் வைத்தியசாலையில் எண்ணப் பட்டதாக நிருபர்கள் மூலம் உறுதிப் படுத்தியுள்ளன.
4tamilmedia thanks
No comments:
Post a Comment