உத்தரபிரதேசத்தின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தின் தாத்ரி நகருக்கு அருகே உள்ள பிசாதா கிராமத்தில் வசித்து வந்த இக்லாக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கிராமத்தினரால் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, விஷால் மற்றும் சிவம் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட இக்லாக்கின் குடும்பத்தினரை உள்ளூர் பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான மகேஷ் சர்மா, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இக்லாக் குடும்பத்தினரை சந்தித்தார்.
மேலும் இக்லாக்கின் குடும்பத்தினர் நேற்று, முதல்–மந்திரி அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்து பேசினர். அப்போது இந்த சம்பவத்துக்கு இழப்பீடாக இக்லாக் குடும்பத்தினருக்கு, ரூ.45 லட்சம் வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
இந்த நிலையில் இக்லாக் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இக்லாக் குடும்பத்தினர் மாட்டிறைச்சி உண்டதாக கோவிலில் அறிவிப்பு செய்யுமாறு சாமியாரை வற்புறுத்தியவர் இவர்தான் எனவும், சாமியார் கொடுத்த தகவலின் பேரில் தான் இவர் கைது செய்யப்பட்டார் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இக்லாக் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் 2 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிசாதா கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
அங்கு சட்டம்–ஒழுங்கை மீறும் பெண்களை கட்டுப்படுத்துவதற்காக, கூடுதலாக பெண் போலீசாரை பணியில் அமர்த்துமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கிராமத்தில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
/viyapu.net/news thanks
No comments:
Post a Comment