
புதுடெல்லி:பொருளாதார வளர்ச்சின் பயன்கள் ஒரு
சாராருக்கு மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கக் கூடாது. தேசத்தின் முன்னேற்றம் என்ற
மரத்தில் உருவாகும் ஒவ்வொரு கனிகளும் நாட்டில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
இந்திய குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி தனது குடியரசு தின உரையில்
குறிப்பிட்டுள்ளார்.
64வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரணாப்
முகர்ஜி, வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் சுருக்கம்
வருமாறு:
சமீபகாலமாக நமது நாட்டின் எல்லையில் பதற்றம்
அதிகரித்துள்ளது. அருகருகே உள்ள நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது
சகஜம்தான். ஆனால் இதுவே பதற்றமாக அதிகரிக்கும் போது முன்னேற்றம் தடைபடும். சில
நாடுகள் பயங்கரவாதத்தின் மையமாகவும், அங்குள்ள சிலர் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து
உதவி வருவதும் பெரும் கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது. இந்தியா எப்போதுமே
அமைதியைத்தான் விரும்புகிறது. இந்தியா நம்பிக்கையுடன் நட்புக் கரத்தை நீட்டி
வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் எளிதாக எடுத்துக் கொண்டு உதாசீனப்படுத்தக்
கூடாது.
எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைத்து மக்கள்
பிரதிநிதிகளும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்பவை வாழ்வியல் அறநெறிகளை பின்தள்ளும் நிலை ஏற்பட்டு
விடுமா என்ற கேள்வி எழுகிறது.
டெல்லியில் மாணவி ஒருவர் கொடூரமாக பலத்காரம்
செய்யப்பட்டு இறந்தது, நவீன இந்தியாவின் மிகப்பெரிய சோகமாக அமைந்துவிட்டது. நமது
மனதில் தீராத துன்பத்தையும்,வெறுமையையும் அச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற
சம்பவத்தால் நமது இளைஞர்களும், இளைஞிகளும் கோபவுணர்ச்சியின் உச்சத்துக்கு சென்று
போராட்டம் நடத்தினர். இதற்காக நாம் இளைஞர்களை குறைகூறவா முடியும்?
பெண்களின் கண்ணியத்தைக் காப்பதே இந்தியாவின்
நாகரீகமாக அறியப்படுகிறது. எப்போது ஒரு பெண்ணுக்கு எதிராக கொடுமை நிகழ்த்தப்பட்டதோ
அப்போதே நமது தேசத்தின் ஆன்மா காயப்பட்டுவிட்டது. நமது நீதிநெறிகளை மீண்டும் நிலை
நிறுத்த வேண்டிய நேரமிது.
மனிதப் பண்புகளையே வெறுக்கவைக்கும் செயல்களை
அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்வுகள் நன்னெறி என்பதைக் குருடாக்குகிறது. நாம்
எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதை நமது மனசாட்சியை ஆராந்து அறிய வேண்டும்.
இளைஞர்கள் காலி வயிற்றுடன் கனவு காண முடியாது.
அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும்,அடுத்து தேசத்தின்
வளர்ச்சியில் பங்காற்றவும் வேலைவாய்ப்பு பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சின்
பயன்கள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கக் கூடாது. தேசத்தின்
முன்னேற்றம் என்ற மரத்தில் உருவாகும் ஒவ்வொரு கனிகளும் நாட்டில் அனைவருக்கும்
கிடைக்க வேண்டும். வறுமையின் கொடுமைகளை அகற்றுவதே முதல் நடவடிக்கையாக இருக்க
வேண்டும். எனெனில் வறுமையும் சமூகக் குற்றங்களுக்கு முக்கியக் காரணமாகிறது. உரிய
முறையில் கல்வி அளிப்பதன் மூலம் பின்தங்கியிருப்பவர்களை சமுதாயத்தின் அடுத்தடுத்த
படிக்கட்டுகளில் ஏற்ற முடியும்.நாடு இப்போது தீவிரமான பொருளாதார சீர்த்திருத்த
நடவடிக்கையில் நடைபோடுகிறது. சமூகப் பொறுப்புணர்வு இல்லாததன் காரணமாகவே பல வளர்ந்த
நாடுகள் இப்போது பொருளாதாரச் சிக்கல்களில் வீழ்ந்துள்ளன. நாம் இதனைத் தவிர்க்க
வேண்டும். நமது கொள்கைகளின் பலன்கள் கிராமங்கள்,விவசாயம், தொழில்கள், பள்ளிகள்,
மருத்துவமனைகள் ஆகியவற்றில் தெரிய வேண்டும். நம்மை சுற்றியுள்ள பிரச்னைகள் சூழும்
முன்னர் நாம் விரைந்து செயல்பட வேண்டும் என்று பிரணாப் உரையாற்றினார்.
thoothuonline thanks
No comments:
Post a Comment