ஜனவரி 29, 2013 at 9:09:14 AM
பிறப்பாலும், விபத்துகளாலும் மன நிலை பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்திருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை, வீட்டில் வைத்து பார்க்க முடியாமல், பழனியில் கூடும் பக்தர்கள் கூட்டத்தில் கைவிடப்படும் அவலமே அது. திருவிழாக்காலங்களில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை பழனிக்கு அழைத்து வரும் குடும்பத்தினர், ஐதீகம் என்றும், இனி இறைவன்விட்ட வழியென்றும் கருதி அவர்களை கைவிட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு சொந்தபந்தங்களால் கைவிடப்படும் அவர்கள், அன்னதானக் கூடங்களும், தண்ணீர் பந்தல்களும் அதிகம் நிறைந்த பழனியில் உண்ண உணவின்றி, வீதிகளில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
உறைவிடம் இல்லாததால் குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்களுக்கு அருகில் படுத்துறங்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், சில நேரங்களில் நாய்களாலும், குடி போதையில் திரியும் சிலராலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
குடும்பத்தினரால் கைவிடப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அன்றாட பொழுதைக் கழிக்க சிரமப்படும் அதேவேளையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிலரை சித்தர்களாக கருதி வழிபடும் நிலையும் பழனியில் உள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: இவ்வாறு கைவிடப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
முதியவர்களும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் கைவிடப்படுவதை ஒப்புக்கொண்ட பழனி நகராட்சித் தலைவர், உடல்நலம் பாதிக்கப்பட்டால் மட்டும் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பழனியில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கான இல்லம் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக காப்பகம் அமைப்பது குறித்து கேட்டதற்கு, பழனி திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
கன்னியாகுமரியில் குவியும் மன நோயாளிகள்
வழிபாட்டுத் தலமான பழனி மட்டுமின்றி தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கைவிட்டுச் செல்கின்றனர்.
கோயில் திருவிழாக்களின்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்படும் அதேவேளையில், புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலங்களில் மன நலம் குன்றியவர்களை விட்டுவிட்டுச் செல்வதும் அதிகரித்து வருகிறது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியை புண்ணியபூமியாக கருதும் பலர், அங்கு முதியவர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இதேபோன்று ராமேஸ்வரத்திலும், மன நலம் குன்றியவர்கள் அதிகமாக உள்ளனர். மன நல காப்பங்கள் நிறைந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி நகர வீதிகளில் மனநோயாளிகளை விட்டுவிட்டுச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கைவிடுவது சரியல்ல எனக் கூறும் மன நல மருத்துவர்கள், அவர்களை குழந்தைகள் போல பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
மன நலம் குன்றியவர்களையும், முதியவர்களையும் இதுபோன்று வழிபாட்டுத் தலங்களில் விட்டுவிட்டுச் செல்லும் மூட நம்பிக்கையை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே மன நல மருத்துவர்களின் கருத்தாக உள்ளது
.puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment