12 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு. புதுடில்லி கோர்ட்டில் ஆஜர்.
03 March 2013 09:20:25 AM
மணிப்பூர் மாநில தலைநகர்
இம்பால் விமான நிலையம் அருகே கடந்த 2000ம் ஆண்டு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 10
அப்பாவி பொதுமக்களை அசாம் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
அப்பாவி மக்களை
விசாரணை இன்றி சுட்டுக்கொல்லும் வகையில் ராணுவத்தினருக்கு தனி அதிகாரம் வழங்கும்
ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்
10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரோம் ஷர்மிளா
என்ற பெண் கடந்த 12 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கைது செய்த மணிப்பூர் போலீசார், இரோம்
ஷர்மிளாவை விசாரணைக் காவலின் கீழ் ஆஸ்பத்திரியில் அனுமதித்து பலவந்தப்படுத்தி
மூக்கின் வழியாக திரவ உணவுகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த
2000-ம் ஆண்டு புதுடெல்லி ஜன்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம்
ஷர்மிளா மீது புதுடெல்லி போலீசார் முன்னர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு
செய்திருந்தனர். இவ்வழக்கின் விசாரணை நாளை புதுடெல்லி கோர்ட்டில் நடைபெறுகிறது.
இவ்வழக்கில் அவரை ஆஜர்படுத்தும் விதமாக இரோம் ஷர்மிளாவை இம்பாலில் இருந்து
விமானம் மூலம் அழைத்துச் செல்ல மணிப்பூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி,
இன்று அவர் புதுடெல்லி அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
இரோம் ஷர்மிளாவை காண
சமூக ஆர்வலர்களும், நண்பர்களும் இம்பால் விமான நிலையம் அருகே திரளக் கூடும்
என்பதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment