குளிர்ச்சியாகவும் பசுமையாகவும்
இருக்கிற இந்த மலைகள் ஒரு காலத்தில் உக்கிரத்தின் உச்சியாக இருந்தது.
பரிதவித்துக்கொண்டிருந்த எங்களை யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா? உண்மைகளை
உலகத்துக்குச் சொல்ல மாட்டார்களா? நமக்கு விடிவு பிறக்காதா? என ஏங்கிய நாட்களில்
எங்கள் சோகத்தைச் சொல்ல யாரும் முன்வரவில்லை. எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள்
எங்கள் கண் முன்னே சுட்டுக் கொல்லப்படுவார்கள். அடுத்த நாள் தினசரிகளில்,
வீரப்பனோடு அதிரடிப் படை நேருக்கு நேர் மோதல்... வீரப்பன் கூட்டாளிகள் சுட்டுக்
கொல்லப்பட்டார்கள் என்பதே தலைப்புச் செய்தியாக இருக்கும். இன்றாவது மனம் திறந்து
எங்கள் சோகத்தையும் அனுபவித்த வேதனையையும் கேளுங்களேன்'' என்ற வேதனைக் குரலோடு
நிகழ்ந்து முடிந்தது வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஈரோடு
மாநாடு.
உடலில் குண்டுகளோடு இருக்கும் பெலியன், ''சாமி, நான்
அந்தியூர் பக்கத்தில் இருக்கும் தேவர்மலை கிராமத்தைச் சேர்ந்தவன். ஒருநாள் மதிய
நேரத்துல நான் செங்குளம் மலைப் பகுதியில மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு
ஐம்பது, அறுபது அதிரடிப் படை போலீஸ்காரங்க தூரத்துல இருந்து என்னைப் பார்த்து
வீரப்பன் ஆளுன்னு நினைச்சு சரமாரியாச் சுட்டாங்க. சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு
விழுந்துட்டேன். மயக்கம் தெளிஞ்சு பார்க்கும்போது கோவை ஜி.ஹெச்-ல இருந்தேன்.
அதிரடிப் படை போலீஸார், 'வீரப்பன் எங்கடா இருக்கான்?’னு கேட்டு மிரட்டினாங்க.
'சாமீ, நான் புள்ளகுட்டிகாரங்க. சத்தியமா வீரப்பனைப் பார்த்ததே இல்லை’னு சொல்லி
அழுதேன். இருந்தும் வீரப்பனின் கூட்டாளினு தடா வழக்குப் போட்டு மைசூர் சிறையில் 20
வருஷம் போட்டுட்டாங்க.

என்
உடம்பில் 104 ரவைகள் (பால்ரஸ் குண்டுகள்) பாய்ஞ்சு இருந்தது. அதில் நாலு குண்டுகளை
மட்டும் எடுத்தாங்க. மீதி குண்டுகளை எடுத்தால், செத்துப்போயிடுவேன்னு டாக்டர்
சொல்லிட்டாங்க. இன்னும் என் உடலுக்குள்ள 100 குண்டுகள் இருக்குது. வலி தாங்க
முடியல. வேலை வெட்டிக்குப் போக முடியல. ராத்திரியில் தூங்க முடியாம துடியாத்
துடிச்சுட்டு இருக்கேன். இதோ பாருங்க சார்'' என்று சட்டையைக் கழற்றிக் காண்பித்து
அழத் தொடங்கினார்.
ரக்கம்பட்டி மலைக் கிராமத்தை சார்ந்த மாதி, ''என் கணவர்
பேரு கிருஷ்ணா. அவர் கடலை, மிளகாய் வியாபாரம் செய்வார். ஒரு நாள் காலையில... என்
பொண்ணுக்குக் காய்ச்சல். 'கொளத்தூர் சந்தை போறேன். மத்தியானம் குழந்தையைத்
தூக்கிட்டு வா. ஆஸ்பத்திரிக்குப் போகலாம்’னு என் வீட்டுக்காரர் சொன்னார். நானும்
குழந்தையைத் தூக்கிக்கிட்டு சந்தைக்கு வந்தேன். அவரைக் காணலை. அங்க இருந்தவங்க,
'உன் வீட்டுக்காரரை போலீஸ் பிடிச்சுட்டுப் போயிடு’ச்சுன்னு சொன்னாங்க.
குழந்தையைத் தூக்கிட்டு மேட்டூர் கேம்ப்புக்கு ஓடினேன்.
நிர்வாணமா அடிச்சுச் சித்ரவதை செஞ்சதுல, உடம்பெல்லாம் ரத்தமா உக்கார்ந்து
இருந்தார். அழுது துடிச்சேன். என் கண் முன்னே அவரை தீப்பந்தத்தில் ஆண் உறுப்பைக்
கருக்கினாங்க. உடம்பு முழுசும் தீ பந்தத்தாலேயே சுட்டுக் கொன்னுட்டாங்க. என் மூத்த
பையனையும் அடிச்சே கொன்னுட்டாங்க. என்னையும் அடித்துச் சித்ரவதை செஞ்சு தடா
வழக்குப் போட்டு மைசூர் ஜெயில்ல அடைச்சுட்டாங்க. தலையில பூட்ஸ் கால்ல உதைச்சதால,
அடிக்கடி தலை வலிக்குது. கண்ணு தெரியல. தொடர்ந்து முட்டியில அடிச்சதால நடக்க
முடியல'' என்று கதறி அழுதார்.
மார்க்கம்பாளையம் மலைக் கிராமத்தை சார்ந்த சிவனையன்,
''நான் பண்ணையத்தில் இருந்தேன். மாடுகளை ஓட்டிட்டுப்போய் மலங்காட்டுல மேய்ச்சுட்டு
வரணும். மாடு மேய்ச்சுட்டு இருந்தப்ப, அங்க வந்த அதிரடிப் படை என்னைப்
பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. முதல்ல குன்றி கேம்ப்ல வெச்சிருந்தாங்க. கொஞ்சநஞ்ச
சித்ரவதை இல்லை. கண்களைக் கட்டிப் போட்டு, நிர்வாணமா நிற்கவெச்சு, கையிலயும்
கால்லயும் விலங்கு போட்டுத் தலைகீழா தொங்கவிட்டு அடிப்பாங்க. ஆசனவாய்ல மிளகாய்ப்
பொடி திணிச்சுக் கொல்லுவாங்க. கரன்ட் ஷாக் கொடுத்துக் கொடுமைப்படுத்துவாங்க. 36
நாள் கழிச்சு மேட்டூர் கேம்புக்குக் கூட்டிட்டு வந்தாங்க. அங்கேயும் இதே
கொடுமை.
ஒரு
நாள் ராத்திரி 9 மணிக்கு என்னையும் இன்னொருத்தரையும் மேட்டூர் டிராவல்ஸ்
பங்களாவுக்கு 'ஐயா வந்திருக்கார்... வாங்கடா’னு கூட்டிட்டுப் போனாங்க. என்கூட
வந்தவரை இரவு ரெண்டு மணி வரை அதிகாரி ஒருத்தர் விசாரிச்சார். நான் ஓரமா
நின்னுக்கிட்டு இருந்தேன். விசாரிச்சு முடிச்சதும் கண்ணையும் கை கால்களையும்
கட்டிப்போட்டு அவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. எனக்கு பகீர்னு இருந்துச்சு. என்னை,
அந்தப் பாடியைத் தூக்கி ஜீப்புல போட சொன்னாங்க. ஜீப் நேரா மேட்டூர் டேமுக்குப்
போனது. பாடியைத் தூக்கி டேமுக்குள்ள போடச் சொன்னாங்க. போட்டேன். என்னை மறுபடியும்
கேம்ப்ல கொண்டாந்துவிட்டுட்டாங்க.
இப்படி வாரத்துக்கு மூணு, நாலு பேரை விசாரிச்சுக்
கொல்லுவாங்க. 66 பேர் பொணங்களை மேட்டூர் டேம்ல போட்டிருக்கேன். கடைசியா இதுவரை
எத்தனைப் பேரை டேம்ல போட்டிருக்கனு அந்த அதிகாரி கேட்டார். '66’-னு சொன்னேன். 'இவனை
வெளியில விட்டா, எல்லா உண்மையையும் சொல்லிடுவான். இவனையும் போட்டுடலாம்’னு சொல்லி
என் கண்ணையும் கை கால்களையும் கட்டினாங்க. நான் கதறினேன். கட்டின முடிச்சு
அவிழ்ந்துடுச்சு. என்ன நினைச்சாங்களோ... விட்டுட்டாங்க.
இது
மாதிரி ஏழு முறை என் கண்களைக்கட்டி, நான் கத்திக் கதறியதும் அவிழ்த்து
விட்டுட்டாங்க. எப்படியோ நான் தப்பிச்சுட்டேன். இது எல்லாத்தையும் சதாசிவம் கமிஷன்
விசாரிக்கும்போது சொல்லி இருக்கேன்'' என்றார்.
கர்நாடக மலைக் கிராமமான நல்லூர், அஞ்சிபாளையத்தைச்
சேர்ந்த செல்வி, ''அப்ப எனக்கு 14 வயசு. குழந்தை பிறந்து 25 நாள் இருக்கும். அக்கா,
மாமா, அண்ணன், அண்ணி எல்லாம் கூட்டுக் குடும்பமா வாழ்ந்துட்டு இருந்தோம். நைட்ல
வந்த அதிரடிப் படை போலீஸ்காரங்க, எங்களை குடும்பத்தோட பிடிச்சுட்டுப் போய்
தனித்தனியாகப் பிரிச்சு, அன்னூர் ஸ்டேஷனிலும், மாதேஸ்வரன் மலை கேம்ப்லேயும்,
பண்ணாரி கேம்ப்லேயும் போட்டுட்டாங்க. என்னையும் என் கைக்குழந்தையையும் மேட்டூர்
ஜி.ஹெச்-ல சேர்த்தாங்க.
என்னைச் சுற்றி எப்போதும் பத்து, பதினைஞ்சு போலீஸ்காரங்க
இருப்பாங்க. அடிச்சுத் துன்புறுத்துவாங்க. என் குழந்தைக்குப் பால் கொடுக்கக்கூட விட
மாட்டாங்க. அந்தப் பிஞ்சுக் குழந்தை அழுது துடிக்கும். ஆஸ்பிட்டல்ல இருந்த
ரெண்டாவது நாள் என் கண் முன்னாடியே குழந்தைக்கு விஷ ஊசி போட்டுக் கொன்னுட்டாங்க.
பிறகு என்னை மாதேஸ்வர மலை கேம்ப்புக்குக் கூட்டிட்டுப் போய் நிர்வாணமா நிக்கவெச்சு,
அங்க இருந்த ஆம்பளைங்க உறுப்புல என்னை கரன்ட் ஷாக் கொடுக்க சொல்லுவாங்க. அங்க
இருந்த பொம்பளைங்க உறுப்புல ஆண்களை கரன்ட் வெக்கச் சொல்லுவாங்க. சொன்னபடி
கேட்கலைனா, சுட்டுக் கொன்னுடுவாங்க. நாங்கெல்லாம் எப்பவோ செத்துப்போயிட்டோம். இப்ப
வெறும் உடம்பு மட்டும்தான் இருக்கு'' என்று கதறி அழுதார்.
காட்டில் வசிப்பவர்களா காட்டுவாசிகள்?
thedipaar. thanks
|
No comments:
Post a Comment