சனி 30, மார்ச் 2013
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் பரிந்துரையின் பேரில், ஸ்டெர்லைட்
ஆலையை மூட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்று
தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருட்டு ஆலையில்
இருந்து கடந்த 23ம் தேதி நச்சு வாயு வெளியேறி பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல்
மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். இந்த நச்சுக் காற்றினால் பனித்துளிகள் படர்ந்து
இருந்த செடிகள், மரங்களின் இலைகள் பூக்கள் நிறம் மாறி கருகி உதிர்ந்தன.
ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர்
மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆடையை இழுத்து மூடக் கோரி மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை
மூட வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர்.
வியாழக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தூத்துக்குடி மக்கள்
சார்பாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆலையை முற்றுகையிட முயன்ற வைகோ,
நல்லகண்ணு, வெள்ளையன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும்,
விஷவாயு வெளியேறியது குறித்து விளக்கம் கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு மாவட்ட
ஆட்சியர் ஆசிஷ்குமார் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதற்கு ஆலை நிர்வாகம் சரியான பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து ஆலையை மூடுமாறு
மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். இதையடுத்து,
ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து,
நேற்றிரவு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த
அதிகாரிகள் தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள உப மின் நிலையத்திலிருந்து ஸ்டெர்லைட்
ஆலைக்கு செல்லும் உயர் அழுத்த மின்சாரத்தை துண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி ஆர்.டி.ஓ லதா, தாசில்தார்
ஆழ்வாரம்மாள் உள்ளிட்ட அதிகாரிகளும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச்
சேர்ந்த அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று ஆலையின் உற்பத்தியை நிறுத்துமாறு
மாசுகட்டு்பபாட்டு வாரிய உத்தரவை அளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை இன்று
மூடப்பட்டது.
முன்னதாக, ஸ்டெர்லைட் அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சாலையை
உடனடியாக நிறுத்த முடியாது. 3 நிலைகளில் உள்ள இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டினை
படிப்படியாகத்தான் நிறுத்தமுடியும் என்று தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி
மீளவிட்டானில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தின்
உதவியுடன் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
ஸ்டெர்லைட் மின் உற்பத்தி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதையடுத்து, தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் ஆலையை மூட
நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் மற்றும் தமிழக அரசிற்கு நன்றியையும்,
பாராட்டுகளையும் தெரிவித்தனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், ராஜாஜி பூங்கா
உட்பட பல இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை
முன்பு கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலை முன்பு வீராங்கானை அமைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு, நகர
வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், சிபிஎம்
மாவட்ட செயலாளர் அர்ஜூணன், மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத்குமார், சேவியர்,
உட்பட பலர் பட்டாசு வெடித்தனர்.
மீனவர்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் ஆலயம் முன்பு மீனவர் ஐக்கிய முண்ணனி சார்பில்
அதன் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில், செயலாளர் ஜாய் காஸ்ட்ரோ, ஆலோசகர் சுபாஸ்
பர்னாந்து, ஏடிஎஸ் அருள், பிஎஸ்ஜி சுரேஷ், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வராஜ்,
முன்னாள் நகராட்சி தலைவர் மனோஜ்குமார், பிஎஸ்ஜே சுரேஷ் ஆகியோர் பட்டாசு வெடித்தும்
இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீனவர்களின் முற்றுகை போராட்டத்திற்கு
கிடைத்த வெற்றி என்றும், ஆலையை எதிர்த்து பேராடிய அனைவருக்கும், ஆலையை மூட
நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி என்றனர்.
.tutyonline thanks
No comments:
Post a Comment