Tuesday, 26 March 2013 01:02

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான சிபிஐ யின் முதல்கட்ட விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி தியாகி லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கு என்று அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட 12 ஹெலிகாப்டர்கள், ஆங்கிலோ- இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
மொத்தம் ரூபாய் 3 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக, அந்த நிறுவனம் ரூபாய் 362 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்த ஊழல் குற்றசாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. விசாரனையைத் தொடங்கிய சிபிஐ, முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ் பி தியாகி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பகோடியா சகோதரர், சதீஷ் பகோடியா, உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
லஞ்சப்பணம் துனீஷியா, மொரீஷியஸ், வழியாக இடைத்தரகர்கள் மூலம் இவர்களுக்கு வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இத்தாலி, மொரீஷியஸ், துனிஷியா நாடுகளிடம் ஹெலிகாப்டர் பெற ஊழலில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்னாள் விமானப்படை தளபதி எஸ் பி தியாகி லஞ்சப்பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத தகவல்கள் தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் எப்படி, இடைத்தரகர்கள் மூலம் பணம் பெற்றார்களோ, அதே போல இடைத்தரகர்கள் மூலம் தியாகி லஞ்சப்பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் எவ்வளவு பணம் பெற்றார் என்பது இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தியாகியின் உறவினர்கள் வங்கியின் மூலம் இரண்டு தவணையாக லஞ்சப்பணம் பெற்றதும் வங்கி ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தாங்கள் சேகரித்த ஆவணங்கள் அனைத்தையும் மத்திய அமுலாக்கப் பிரிவு இயக்குனகரத்திடம் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. எனவே, விரைவில் மத்திய அமுலாக்க பிரிவு இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
4tamilmedia. thanks
No comments:
Post a Comment