By ராமநாதபுரம்
First Published : 30 July 2013
திருப்பாலைக்குடியில் ஜமாத்திற்குரிய தொகையை செலுத்தாமல் திருமணம் செய்து கொண்டதால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக முஸ்லிம் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த உமர்அக்தாப் அலி மகன் செய்யது புகார் (25), அதே தெருவைச் சேர்ந்த பிர்தௌஸ் மகள் தாருன்ஷிபா (19). இருவருக்கும் 17.11.2012ல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக திருப்பாலைக்குடி தெற்குத் தெரு ஜமாத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.8 ஆயிரத்தை வறுமை காரணமாகவும், வரதட்சிணை வாங்காததாலும் செய்யது புகார், தாருன்ஷிபா ஆகியோர் செலுத்தவில்லையாம்.
இத்தொகையை செலுத்தாத காரணத்தால் கணவன், மனைவியின் குடும்பத்தினர் உள்பட மொத்தம் 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக ஆட்சியரிடம் அக்குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து புகார் தெரிவிக்க வந்திருந்த லுக்மான் கூறியதாவது:
திருப்பாலைக்குடி தெற்குத் தெரு ஜமாத்துக்கு திருமணத்துக்காக இரு வீட்டார் தரப்பிலும் செலுத்த வேண்டிய தொகை ரூ.8 ஆயிரத்தை நாங்கள் செலுத்தவில்லை. இதனால் மணமக்கள் வீட்டார், அவர்களது குடும்பத்தினர் உள்பட 10 குடும்பங்களை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக அறிவித்து ஊரில் அறிவிப்புப் பலகையிலும் எழுதி வைத்துள்ளனர்.
பள்ளிவாசலில் தொழுகை நடத்தவோ, பொதுக் குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கவோ 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அனுமதிப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களில் சீனி நயினாமுகம்மது, உமர்ஹக்தாப் அலி, காதர் இப்ராகிம், ஷேக் முகம்மது, சாகுல் ஹமீது, பிர்தௌஸ், ஹயாத்துதீன், முகம்மது அலி, செய்யது புகார் மற்றும் நான் உள்பட மொத்தம் 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டனர்.
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் புகார் செய்துள்ளோம் என்று லுக்மான் தெரிவித்தார்.
dinamani thanks
No comments:
Post a Comment